வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Saransh Kanaujia
0 Min Read

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் என்று குவஹாத்தியில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் -2024) 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பாதை அறிவியல் முன்னேற்றத்துடனும் கண்டுபிடிப்புகளுக்கான அதன் உறுதிப்பாட்டுடனும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் பங்களிக்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுத்த ஆறு முக்கிய முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், விண்வெளி புத்தொழில்களுக்கான ரூ. 1,000 கோடி துணிகர நிதி, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த வானிலை இயக்கம் தொடங்குதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயோ-இ 3 முன்முயற்சி, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி இதழ்களின் உலகளாவிய அணுகலை வழங்க “ஒரு நாடு, ஒரு சந்தா” கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான ய அடல் கண்டுபிடிப்பு இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகத் தலைமை இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

அறிவியல் – தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பல்வேறு வகையான செயல்பாடுகளை வழங்குகிறது. சந்திரன் அருங்காட்சியக கண்காட்சி, 3டி லேசர் கண்காட்சி, மறுகற்பனை பாரத கண்காட்சி, இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். பாதுகாப்பு கண்காட்சி, வடகிழக்கின் அறிவியல் வளங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்வு ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.

இந்தியா முழுவதிலுமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.  அறிவியல்- தொழில்நுட்பத்தில், இளம் உள்ளங்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு ஊக்க சக்தியாக செயல்படுகிறது.

நித்தி ஆயோக்கின் டாக்டர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே.சூட், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி, உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Related Post

Share This Article